5198. | 'பூவிலோன் ஆதியாக, புலன்கள் போம் நெறியில் போகாத் தேவரோ,அவுணர்தாமோ, நிலை நின்று வினையின் தீர்ந்தார் ? ஏவல் எவ் உலகும்செல்வம் எய்தினார் இசையின் ஏழாய் ! பாவமோ ? முன்நீ செய்த தருமமோ ? தெரியப் பாராய் ! |
ஏழாய் ! -அறிவில்லாதவனே; இசையின் - உணர்ந்தால்; பூவிலோன் ஆதியாக - மலர் வீட்டில் இருக்கும் பிரம்ம தேவனைத் தலைமையாகக் கொண்டு; புலன்கள் போம் - ஐம்புலன்களும் ஓடுகின்ற; நெறியில் போகா - தீய வழியில் செல்லாத; தேவரோ - தேவர்களோ; அவுணர்தாமோ - அசுரர்களோ (எவர்); நிலை நின்று - நிலை பெற்று நின்று; வினையில் தீர்ந்தார் - தீவினையிலிருந்து நீங்கியவர்; எவ்வுலகும் - எல்லாவுலகங்களும்; ஏவல் செல்வம் - அடிமை செய்யும்படியான செல்வத்தை; எய்தினார் - பெற்றவர்கள்; முன் நீ செய்த பாவமோ - (உன்னிடத்தில் செல்வம் உள்ளதென்றால் அதற்குக் காரணம்) முன்பு உன்னால் செய்யப்பெற்ற பாவமா (அல்லது); தருமமோ - (முன்பு உன்னால் செய்யப்பெற்ற) அறமா; தெரிய - விளங்கும்படி; பாராய் - ஆராய்வாயாக. பூ இல்லோன் -மலரை இல்லமாகப் பெற்ற பிரமன். கமலவீடு (மீனாட்சி தமிழ் -18) (130) |