5216. | 'பதவிய மனிதரேனும், பைந்தொடி ! நின்னைத் தந்த உதவியை உணரநோக்கின், உயிர்க் கொலைக்கு உரியர் அல்லர்; சிதைவுறல் அவர்க்கு வேண்டின், செய் திறன் தேர்ந்தது எண்ணின், இதன் நினக்குஈதேஆகின், இயற்றுவல்; காண்டி ! இன்னும், |
பைந்தொடி -பசியவளையல் அணிந்தவளே; (இராமலக்குவர்கள்) பதவு இயல் - புல்லின் இயல்பைப் பெற்ற; மனிதரேனும் - மனிதராக இருந்தாலும்; நின்னைத் தந்த - உன்னை எனக்குத் கொடுத்த; உதவியை - உபகாரத்தை; உணர நோக்கின் - சிந்தித்துப் பார்த்தால்; (அவர்கள்) உயிர்க் கொலைக்கு உரியர் அல்லர் - உயிரைக் கொல்வதற்குத் தக்கவராகார்; அவர்க்கு - அந்த இராமலக்குவர்க்கு; சிதைவு உறல் வேண்டின் - அழிவு வருதலை நீ விரும்பினால்; செய்திறன் - யான் செய்யும் உபாயம்; நேர்ந்தது எண்ணின் - உன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டால்; நினக்கு - உனக்கு; ஈதே இதன் - இச்செயல் (கொல்லுதல்) நன்மை; ஆகின் - ஆனால்; (அச் செயலை) இன்னும் - இப்போதே; இயற்றுவன் - செய்வேன். புல் போன்ற மனிதர்கள்; அவர்களைக் கொல்வது எளிது. என்றாலும் நன்றியால் கொல்லேன் என்பது இராவணன் பண்பு. பதவு + இயல் - பதவியல் - பதவு - புல் நல்வேறு செங்கோற் பதவின் வார் குரல் கறிக்கும் (குறுந்தொகை 363) இராமலக்குவர்களை, முன்பாட்டில் பசு என்றான்.இப்பாட்டில் அதனால் மேயப்படும் புல் என்றான் - உண்பதும், உண்ணப்படுவதும் பிரமம் என்னும் கொள்கை அவன் அறியாமல் வந்தது போலும். சீதையே உனக்கு விருப்பம் இருப்பின் அவர்களைக் கொல்வேன் என்பது இராவணாகாரம். கணவனைக் கொன்று மனையாளை அடையும் பண்பு பாலைப்பண்பு விரிப்பின் பெருகும் தொகுப்பின் குறுகும். திறன் - உபாயம். 'உய்திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார்' (கம்ப. 196) (148) |