5219.

'அஞ்சுவித்தானும், ஒன்றால் அறிவுறத் தேற்றியானும்,
வஞ்சியின்செவ்வியாளை வசித்து, என்பால் வருவீர்;
                                  அன்றேல்,
நஞ்சு உமக்குஆவென்' என்னா, நகை இலா
                           முகத்து, பேழ் வாய்,
வெஞ்சினத்துஅரக்கிமார்க்கு, வேறு வேறு
                        உணர்த்திப் போனான்.*

(இராவணன்)

    வஞ்சியின்செவ்வியாளை - வஞ்சிக் கொடியைவிட மென்மை வாய்ந்த
சீதையை; ஒன்றால் - ஒரு உபாயத்தால்; அஞ்சுவித்தானும் - அச்சமடையச்
செய்தாவது (அன்றேல்); ஒன்றால் - வேறு ஒரு உபாயத்தால்; அறிவுறத்
தேற்றியானும் -
அறிவில் பொருந்தும்படியாகத் தெளிவை உண்டாக்கியாவது;
வசி்த்து - வசப்படுத்தி (பிறகு); என்பால் வருவீர் -என்னிடத்தில்
வருவீராக;அன்றேல் - அவ்வாறு செய்யாமற் போனால்; உமக்கு நஞ்சு
ஆவென் -
உங்கட்கு நான் விடம் ஆவேன்; என்னா - என்று; நகையிலா
முகத்து -
சிரிப்பறியா முகத்தையும்; பேழ்வாய் - பிளந்த வாயையும்;
வெஞ்சினத்து -கொடுங் கோபமும் (பெற்ற); அரக்கிமார்க்கு - அரக்கிகட்கு;
வேறு வேறு -தனித்தனியாக; உணர்த்திப் போனான் - அறிவுறுத்திச்
சென்றான்.

     வசித்து -வசப்படுத்தல். தன்னால் முடியாததைத் தன் பணிப் பெண்கள்
முடிப்பர் என்று நினைத்த இராவணனின் அறியாமை பெரிது. ஆசை அறிவை
அழிக்கும்.                                                 (151)