5223.

'மண்ணில்தீய மானுயர் தத்தம் வழியோடும்,
பெண்ணில்தீயோய் ! நின் முதல் மாயும் பிணி
                                   செய்தாய்,

புண்ணில்கோல் இட்டாலன சொல்லி; பொது
                                நோக்காது
எண்ணிக்காணாய், மெய்ம்மையும்' என்றார், சிலர்
                                எல்லாம்.

     சிலர் எல்லாம்- வேறுசில அரக்கிமார்கள்; பெண்ணில் தீயோய் -
பெண்களுக்குள் தீயவளே; புண்ணில் கோலிட்டாலன - புண்ணிலே அம்பை
ஏவினாற்போல; சொல்லி - கொடிய வார்த்தைகளைப் பேசி; நின்முதல் -
உன் காரணமாக; தீய மானுயர் - தீய இராமலக்குவர்கள்; தத்தம்
வழியோடும் -
தங்கள் தங்கள் மரபுடன்; மண்ணில் - பூமியில்; மாயும் பிணிசெய்தாய் - அழிவதற்கு ஏதுவான நோயை உண்டு பண்ணினாய்;
பொதுநோக்காது -
எல்லோரையும் சமமாகப் பாராமல்; எண்ணி -
(சிறப்புற)ஆராய்ந்து; மெய்ம்மையை - உண்மையை; காணாய் -
பார்ப்பாயாக;என்றார் - என்று கூறினர்.

     வழி - மரபு.முதல் - காரணம். எண்ணில் காணாய் - என்று
பாடங்கொண்டு பொது நோக்காது எண்ணில் மெய்ம்மை காணாய் என்று
கூட்டி, பொதுவாகப் பாராமல் எண்ணினால் மெய்ம்மையைக் காணமாட்டாய்
என்று உரை கூறினும் ஏற்கும் - பாரபட்சம் பாராதே என்று
அறிவுறுத்துகிறார்கள்.                                     (155)