கலி விருத்தம் 5230. | கரு மேகம்,நெடுங் கடல், கா அனையான் தருமே, தனியேன்எனது ஆர் உயிர்தான் ? உரும்ஏறு உறழ்வெஞ் சிலை நாண் ஒலிதான் வருமே ? உரையாய், வலியார் வலியே ! |
வலியார் வலியே- வலிமைமிகுந்த இராமலக்குவர்பால் உள்ள வலிமையே!; கருமேகம் - கருத்த மேகமும்; நெடுங்கடல் - நெடுங்கடலும்; கா - சோலையும்; அனையான் - ஒத்த இராமபிரான்; தனியேன் - தனித்திருக்கும்; எனது ஆருயிர் - எனது (ஆருயிரை) அரிய உயிரை; தருமே - எனக்குத் தருவாரா ?; உரும் ஏறு உறழ் - பேரிடி போன்ற; வெஞ்சிலை நாண் ஒலி - கொடிய வில்லி்ன் ஒலியானது; வருமே - இலங்கைக்கு வருமா; உரையாய் - கூறுக. இராமபிரானுக்குமேகம் முதலானவை உவமை. ஆழ்வார், கற்பகக் காவன நற்பெருந் தோளற்கு (திருவாய் 6.6.6) என்றார். அதைப்பின்பற்றி இராமபிரானைக் 'கா' என்றார். தேசிகன், இராமபிரானை, 'நடையாடும் பாரிசாதம்' என்று ரகுவீரகத்தியத்தில் பேசினார் (தண்டகா தபோவந ஐங்கம பாரிஜாத) ஆருயிர்தான் ஒலிதான் - தான் உரை அசை. வலியார் விதியே - என்னும் பாடம் ஒதுக்கப்பட்டது. இராமனின் வில்லை நம்பியிருக்கும் பிராட்டி, விதியை அழைத்துப் பேசாள் என்பது சிலருடைய கருத்தாக இருக்கும். இவ்விருத்தம் மா - புளிமா - புளிமா - புளிமா - என்னும் நான்கு சீர்களைப் பெற்று வரும். இப்பாடல் நேரசையில் தொடங்கினால் 11 எழுத்தையும் நிரையசையில் தொடங்கினால் 12 எழுத்தையும் பெற்றுவரும். இப்பாடல்கள் இந்நூலில் 212 இடங்களில் காட்சி தருகின்றன. (3) |