5265.

'படி எடுத்துஉரைத்துக் காட்டும் படித்து அன்று,
                   படிவம்; பண்பின்
முடிவு உள உவமம்எல்லாம் இலக்கணம் ஒழியும்,
                    முன்னர்;
துடிஇடை !அடையாளத்தின் தொடர்வையே
                    தொடர்தி' என்னா,
அடி முதல்முடியின்காறும், அறிவுற அனுமன்
                    சொல்வான்.

     துடி இடை !  -உடுக்குப்போலும் இடையுடையவளே; படிவம் -
இராமபிரானின் திருமேனி; படி உரைத்து - உவமானத்தைக் கூறி;
எடுத்துக்காட்டும் -
(பொதுத்தன்மையை) விளக்கிக்கூறும் (அளவுக்கு); படித்து
அன்று -
(எளிய) இயல்புடையதன்று; உவமம் எல்லாம் - எல்லா
உவமைக்கும்; பண்பின் - பொதுத்தன்மையாகிய பண்பில்; முடிவு உள -
எல்லைகள் உள்ளன; முன்னர் இலக்கணம் ஒழியும் - முற்பட்டு
இலக்கணத்தால் நிரம்பாது நீங்கும்; (உவமையை நோக்காமல்)
அடையாளத்தின் - யான்கூறும் அடையாளங்களின்; தொடர்வையே -
தொடர்ச்சியையே;  தொடர்தி - பின்பற்றி உணர்க; என்னா - என்று;
அடிமுதல் -
திருவடிமுதல்; முடியின்காறும் - திருமுடி முடிய; அறிவுற -
அறிந்து கொள்ளும்படி; அனுமன் சொல்வான் - அனுமன் கூறத்
தொடங்கினான்.

     பத்துமதியிருந்தால்தான் விரல் நகத்துக்கு ஒப்பாம் என்றான். மதி
ஒன்றே; விரல் நகம் பத்து. இங்ஙனம் உவமை அளவுபடுதலைப் பேசினான்.
இதுவே உவமைக்கெல்லாம் முடிவுள என்று கூறப் பெற்றது. பிறவும் இப்படியே
கருதுக. பெருமான் அழகு என்னால் சொல்லப்படாது. சொன்னது கொண்டு
தேவரீர் அறிந்தபடி அளவிட்டுக் கொள்ளும் என்பது பழையவுரை (அடை -
பதி)                                                       (38)