கலி விருத்தம்

5266.

' "சேயிதழ்த் தாமரை" என்று, சேண் உளோர்
ஏயினர்; அதன்துணை எளியது இல்லையால்,
நாயகன் திருஅடிகுறித்து நாட்டுறின்;
பாய் திரைப்பவளமும் குவளைப் பண்பிற்றால் !

(ஐயன் திருவடி)

     சேயிதழ் தாமரைஎன்று -சிவந்த இதழ்களைப் பெற்ற தாமரை மலர்
என்று; சேண் உளோர் - தூரத்திலிருப்பவர் (திருவடியைப் பாராதவர்);
ஏயினர் -
ஒப்பிட்டுப் பேசினர்; அதன் துணை - அத்தாமரை அளவுக்கு;
எளியது இல்லை -
எளிமை உடையது அன்று; நாயகன் - இராமபிரான்;
திருவடி குறித்து -
திருவடியை எண்ணி (அதற்கேற்ப); நாட்டுறின் -
உவமையைக் கூறத் தொடங்கினால்; பாய்திரை - பரவிய அலையுடன் கூடிய
கடலில் உள்ள; பவளமும் - பவளம் கூட; குவளைப் பண்பிற்றாம் -
குவளையின் பண்பை உடையதாம்.

     சேண் உளோர் -தூரத்திலிருப்பவர் (பாதத்தைப் பாராதவர்)
தனித்திருக்கும்போது சிவந்துள்ள பவளம் இராமபிரான் திருவடி
அணுகும்போது குவளைபோல் கரியநிறம் பெறும். குவளைப் பண்பினாம் -
எனப்பாடங்கொண்டு தாமரையைத் திருவடிக்கு உவமையாக்குவது
பவளத்திற்குக் குவளையை உவமை கூறியதற்கு ஒப்பாம் என்று பொருள்.
பாதாதி கேசவர்ணனை மேற்கொள்ளப்பட்டது. இராமன் பரம் பொருள் என்பது
குறிப்பு.                                                  (39)