5281.

'எள்ளா நிலத்து இந்திரநீலத்து
     எழுந்தகொழுந்தும் மரகதத்தின்

விள்ளா முழுமா நிழற் பிழம்பும்
     வேண்டவேண்டும் மேனியதோ ?
தள்ளா ஓதிகோபத்தைக்
     கௌவ வந்துசார்ந்ததுவும்
கொள்ளா,வள்ளல் திரு மூக்கிற்கு;
     உவமைபின்னும் குணிப்பு ஆமோ ?

(பெருமான் மூக்கைப்போன்று)

     எள்ளாநிலத்து - இகழ்ச்சியில்லாத  பூமியில் தோன்றிய; இந்திர
நீலத்து
 - இந்திர நீலக்கல்லில்; எழுந்த கொழுந்தும் - தோன்றிய
முனையும்; மரகதத்தின் - மரகதமணியின்; விள்ளா - பிளவுபடாத; முழுமா
நிழல் பிழம்பும் -
முழுமையான பெரிய ஒளிப்பிழம்பும்; வேண்ட -
(அன்பர்கள்) விரும்ப (அன்பர்களை); வேண்டும் - விரும்புகின்ற;
மேனியதோ -
அழகை உடையதோ ? கோபத்தை கௌவ வந்து - இந்திர
கோபத்தைப் பற்றவந்து; சார்ந்த - பற்றிய; தள்ளா ஓதி அதுவும் - நீங்காத
பச்சோந்தியும்; உவமை கொள்ளா - ஒப்பாதல் பொருந்தாத; வள்ளல்
திருமூக்கிற்கு -
பெருமானின் மூக்கிற்கு; பின்னும் - பிறபொருளும்; குணிப்புஆமோ - ஒப்புமை கூறுதல் ஏற்குமோ ?

     கொழுந்தும்பிழம்பும் மேனியதோ - ஒருமை பன்மை மயக்கம். இந்திர
நீலம் - பெருமான் திருமேனி. கொழுந்து மூக்கு. மரகதம் - பெருமான்
திருமேனி. பிழம்பு - மூக்கு என்க. இந்திர கோபம் - அதரம். பச்சோந்தி
மூக்கு. மூக்கு, கொழுந்தும் பிழம்பும் உவமையாகப் பிறர் கூற அதை விரும்பும்
மேனியுடையதோ என்றும் கூறலாம். உரிய பொருள் காணல் அறிஞர் கடன்.
மூக்கிற்கு, இந்திர கோபத்தைக் கவ்விய ஓந்தியே ஒப்பாகாத போது
பிறவற்றைக் கூறுதல் ஒவ்வா என்க. கோபம் - தம்பலப்பூச்சி (பட்டுப்பூச்சி),
மூதாய் என்பது சங்க வழக்கு, ஓதி - பச்சோந்தி. மேனி - அழகு.       (54)