5283.

'வரு நாள் தோன்றும் தனி மறுவும்,
     வளர்வும் தேய்வும், வாள் அரவம்
ஒரு நாள் கவ்வும் உறு கோளும்,
     இறப்பும், பிறப்பும் ஒழிவுற்றால்,
இரு-நால் பகலின் இலங்கு மதி,
     அலங்கல் இருளின் எழில் நிழற் கீழ்ப்
பெரு நாள் நிற்பின், அவன் நெற்றிப்
     பெற்றித்து ஆகப் பெறும் மன்னோ !

     இரு நால் பகலின்- எட்டாவது நாளில்; இலங்கும் மதி - விளங்கும்
மதியானது; வருநாள் தோன்றும் - வளர்ந்து வரும்
 நாட்களில்
வெளிப்படையாகத் தெரியும்; தனி மறுவும் - தனியாகவுள்ள
களங்கமும்; வளர்வும் தேய்வும் - வளர்தலும் தேய்தலும்; வாள் அரவம் -
கொடிய பாம்பால்; ஒருநாள் கவ்வும் - ஒரு நாள் கவ்வப்படும்; உறுகோளும்
-
மிக்க துன்பமும்; இறப்பும் பிறப்பும் - அழிதலும் தோன்றுதலும்;
ஒழிவுற்றால் - நீங்கப் பெற்றால்; அலங்கல் இருளின் - அசைகின்ற
இருளின்; எழில் நிழற் கீ்ழ் - அழகிய நிழலுக்குக் கீழே; பெருநாள் நிற்பின்
-
நீண்ட நாட்கள் நின்றால் (அது); அவன் - இராமபிரானுடைய; நெற்றிப்
பெற்றித்து ஆக பெறும் -
நெற்றியின் தன்மை உடையதாகக் கருதப்பெறும்.

     மதி,ஒழிவுற்றால், நிற்பின், பெற்றித்து, ஆகப் பெறும் என்று கூட்டுக.
அசையும் இருள் என்றது பெருமானின் நெற்றியின்பால் அசையும் அளகத்தை.
அளகம் - முன் நெற்றி மயிர். இருள் உவம ஆகுபெயராய் இருள் போன்ற
தலை உரோமத் தொகுதியை உணர்த்திற்று. இருண்ட குழற்கற்றையின் கீழ்
விளங்கும் பெருமான் நெற்றிக்கு இருளின் கீ்ழ் ஒளிரும் பிறை ஒன்று
இருக்குமாயின் ஒப்பாகும் என்றவாறு (அண்ணாமலை பதிப்பு)          (56)