5285.

'புல்லல்ஏற்ற திருமகளும்,
     பூவும்,பொருந்தப் புவி ஏழும்
எல்லை ஏற்றநெடுஞ் செல்வம்
     எதிர்ந்தஞான்றும், அஃது இன்றி
அல்லல் ஏற்றகானகத்தும்,
     அழியாநடையை, இழிவான
மல்லல் ஏற்றின்உளது என்றால்,
     மத்த யானைவருந்தாதோ ?'

     புல்லல் ஏற்றதிருமகளும் - தழுவுதலை மேற்கொண்ட
திருமடந்தையும்; பூவும் - நிலமடந்தையும்; பொருந்த - தன்பக்கல் தங்க
(அதனால்); புவி ஏழின் - ஏழு உலகங்களின்; எல்லை ஏற்ற - எல்லையை
ஏற்றுக் கொண்ட; நெடும் செல்வம் - நீட்சி மிக்க செல்வமானது; எதிர்ந்த
ஞான்றும் -
எதிர்ப்பட்ட காலத்திலும்; அஃது இன்றி - அச்செல்வம்
இல்லாமல்; அல்லல் ஏற்ற - துன்பம் மிக்குயர்ந்த; கானகத்தும் - காட்டின்
கண்ணேயும்; அழியா நடையை - தளர்ச்சியடையாத நடையை; இழிவான
மல்லல் -
தாழ்வுற்ற வளத்தைப் பெற்ற; ஏற்றின் உளது - காளையின்பால்
உள்ளது; என்றால் - என்று கூறினால்; மத்த யானை - மதம் மிக்க
யானையானது; வருந்தாதோ - வருத்தம் அடையாதோ.

     காளையின்பால் இராமபிரான் நடை உள்ளது என்று கூறின் யானை
வருந்தும் என்று கூறிப் புதிய அணிக்கு வழிவகுத்த கவிச்சக்கரவர்த்தி
புலமையை வழிபடுக. கானகத்தும் - என்பதில் உள்ள
உம் - அசை.'காமக்கடல்
மன்னும் உண்டோ' (குறள் 1164) அழகர் மன்னும் உம்மும் அசை நிலை
என்றார்.காலத்தும் என்னும் பாடம் கானத்தும் என்று பாடபேதம்ஆயிற்று
போலும். நடையை என்பதில் உள்ள ஐ அசை - உருபு அன்று.நடைஉளது,
என்றால் புகழானை.......... விளக்கினான் (சிந்தா 2605)                (58)