கடல்கடந்தவாற்றைச் சீதை வினவலும் அனுமன் விடையும்

 5323.

நையுறுசிந்தையள், நயன வாரியின்
தொய்யல் வெஞ்சுழியிடைச் சுழிக்கும் மேனியள்,

'ஐய ! நீஅளப்ப அரும் அளக்கர் நீந்தினை
எய்தியது எப்பரிசு ? இயம்புவாய் !' என்றாள்.

     நைஉறு சிந்தையள்- நைதல்பொருந்திய உள்ளத்தை உடைய
பிராட்டி; நயன வாரியின் தொய்யல் - கண்ணீர்ப் பெருக்கின்; வெம்
சுழியிடை -
கொடிய சுழிகளுக்கு இடையே; சுழிக்கும் மேனியள் - சுழலும்
மேனியை உடையவளாய்; (அனுமனை நோக்கி) ஐய ! - என் தந்தையே; நீ
அளப்பரும் அளக்கர் -
நீ அளவிட முடியாத கடலை; நீந்தனை எய்தியது
-
கடந்து வந்தது; எப்பரிசு - எந்த விதத்தால்; இயம்புவாய் என்றாள் -
கூறுவாயாக என்று வினவினள்.

     தொய்யல் -நீர்ப்பெருக்கு (அண்ணாமலை - பதி) உயர்வு நவிற்சியால்
பிராட்டி கண்ணீர்ப் பெருக்கில் உண்டான சுழிகளில் தத்தளித்தாள். 'கலங்கு
தெண் திரையிற்றாய கண்ணின் நீர்க்கடலில் கண்டேன்', (கம்ப. 6041) என்று
அனுமன் பெருமான்பால் பேசுவான். கடற்சுழி பட்டவர் போல் பிராட்டி
தத்தளித்தாள் என்க.                                      (96)