5395. | ' "படுத்தான், வானவர் பற்றாரை; தடுத்தான்,தீவினை; தக்கோரை எடுத்தான்;நல்வினை, எந் நாளும் கொடுத்தான்"என்று, இசை கொள்ளாயோ ? |
(இராமபிரான்) வானவர்பற்றாரை - தேவர்களின் பகைவரை (அரக்கரை); படுத்தான் - அழித்தான்; தீவினைதடுத்தான் - உலகப் பாவச் செயலை அடக்கினான்; தக்கோரை எடுத்தான் - தகுதி வாய்ந்தவர்களை உயர்த்தினான்; (மக்களுக்கு) நல்வினை - நல்ல செயல்களை; எந்நாளும் - எக்காலத்திலும்; கொடுத்தான் - வழங்கினான்; என்று இசை - என்று உலகம் கூறும் புகழை (நீ); கொள்ளாயோ - இசையாயோ. வானவர்பற்றாரைப் படுத்தான் என்பதால் கொடியோரை ஒறுத்தல் கூறப்பெற்றது. தக்காரை எடுத்தான் என்பதால் தக்கார்க்குத் தலையளி செய்தமை கூறியது. தீவினை தடுத்தான் என்பதால் மறம் களைந்தமை கூறியது என்றுஅண்ணாமலை... கழகம் வரைந்த உரை, அழகர், இனியர், உரையை ஒக்கும். பரம் பொருளே, இராமபிரானாகத் தோன்றியுள்ளான் என்பதும் அவன் தோற்றத்தால் நிறைவேறத் தகும் செயல்களும், அவற்றை நிறைவேற்றியமையால் அவர்க்கு உளதாம் புகழும் கூறி, அப் புகழ் தானும் கற்புடையளாகிய உன்னால் நிலை பெற வேண்டுவதன்றோ என்றவாறு, என்று அண்ணாமலை.... கழகம் பேசும் உரை நம்பிள்ளை வரைந்ததோ என்று தோன்றும்படி உள்ளது. படுத்தாள், தடுத்தாள், எடுத்தாள், கொடுத்தாள் என்னும் பாடம் சிறக்கும் போலும். இப்பாடல், தாயே, நீ உறுதியுடன் இருந்து இப்புகழைப் பெற மாட்டாயோ என்று பொருள் தரும். இங்கு சொன்ன பொருளுக்கே கொள்ளாயோ என்னும் பாடம் சிறக்கும் (51) |