5399.

'சூல் இரும் பெரு வயிறு அலைத்துச் சோர்வுறும்
ஆலிஅம்கண்ணியர் அறுத்து நீத்தன,
வாலியும் கடப்பஅரு வனப்ப, வான் உயர்
தாலி அம் பெருமலை தயங்கக் காண்டியால்.

(அம்மையே)

     சோர்வுறும் -சிந்துகின்ற; ஆலி கண்ணியர் - நீர்த்துளிகளுடன்
கூடிய கண்களை உடைய அரக்கிமார்கள்; சூல் - கருக் கொண்டாற் போன்ற;
இரும் பெருவயிறு அலைத்து -
மிகப் பெரிய வயிற்றில் அடித்துக் கொண்டு;
அறுத்து நீத்தன -
அறுத்து ஒதுக்கியனவும்; வாலியும் கடப்ப அரு -
வாலியாலும் தாண்ட முடியாத; வனப்ப - தோற்றத்தை உடையனவும் (ஆகிய);
வான் உயர் -
வானம் அளாவிய; தாலி பெரு மலை - தாலியாகிய மலை;
தயங்கக் காண்டி -
விளங்குவதைப் பார்ப்பாயாக.

     சூல் - கரு.இயல்பாக உள்ள பெருவயிறு சூல் கொண்டாற்போல்
இருக்கும். ஆலி - நீர்த்துளி. அறுத்து நீத்தனவும், வாலியாலும் கடக்கவியலாத
தோற்றத்தை உடையனவும் ஆகிய தாலிமலை. சூல் - முட்டை போன்று
உருண்டு பருத்திருக்கும்வயிறு. மழைச் சூல் உடும்பு பெரும்பாண் 132)
ஆலியம் கண்ணினர், தாலியம் பெருமலை என்பனவற்றில் உள்ள 'அம்'
சாரியை. காண்டியால் - இதில் உள்ள ஆல் அசை. இதனால் அரக்கர்கள்
அழிவர். உறுதி. உனக்கும், உலகுக்கும் நல்ல காலம் வரும் என்பது
குறிக்கப்பெறுகிறது.                                            (55)