5406.

'நீர்த்துஎழு கணை மழை வழங்க, நீல வான்
வேர்த்தது என்றுஇடை இடை வீசும் தூசுபோல்,
போர்த்து எழுபொலங் கொடி இலங்கை, பூழியோடு
ஆர்த்து எழு கழுதுஇரைத்து ஆடக் காண்டியால்.
 

     நீர்த்துஎழும் கணை - தன்மை உடையதாய் எழும் அம்புகளாகிய;
மழை வழங்க - மழையைப் பொழிய (அதை); நீலவான் - நீலநிறமுடைய
ஆகாயத்துக்கு; வேர்த்தது என்று - வியர்வை உண்டாயிற்று என்று; இடை
இடை -
இடை இடையே; வீசும் தூசு போல் - வீசுகின்ற ஆடையைப்
போல; போர்த்து எழு - நெருங்கி எழுந்துள்ள; பொலங்கொடி இலங்கை -
அழகிய கொடியைப் பெற்ற இலங்கையில்; பூழியோடு - புழுதியுடனே;
ஆர்த்து எழு கழுது - ஆரவாரித்து எழுகின்ற பேய்களை; இரைத்து -
கொக்கரித்து; ஆட - ஆடுவதை; காண்டி - பார்ப்பாயாக.

     ஆல் - அசை. பூழி- புழுதி. தூசு - ஆடை. மேக மண்டலம் வரை
உள்ள கொடி என்க. கொடியாடிய  இலங்கையில் பேயாடும் நிலை வரப்
போகிறது. என்றதால் இலங்கையின் அழிவு பேசப்படுகிறது என்க.      (62)