5407.

'நீல் நிறஅரக்கர்தம் குருதி நீத்தம் நீர்
வேலை மிக்கு,ஆற்றொடு மீள, வேலை சூழ்
ஞாலம் முற்றுறுகடையுகத்து நச்சு அறாக்
காலனும்,வெறுத்து, உயிர் காலக் காண்டியால்.

     நீல்நிறம் -நீலநிறத்தைப் பெற்ற; அரக்கர் தம் - அரக்கர்களின்;
குருதி நீத்தம் - இரத்த வெள்ளம்; நீர் வேலை மிக்கு
 - நீரை உடைய
கடலினும்மிகுந்து (அதனால்) அது; ஆற்றொடு மீள - ஆற்றுடன் திரும்ப
(அதுபோல); வேலை சூழ் - கடலால் சூழப்பெற்ற; ஞாலம் முற்றுறு -
உலகம் முடிவடையும்; கடையுகத்து - யுகத்தின் முடிவிலே (அனைத்தையும்
உண்டு); நச்சு அறாக் காலனும் - கொலைவிடத்தன்மை நீங்காத யமனும்;
வெறுத்து -
(அரக்கரை உண்டு) தெவிட்டிப் போய்; உயிர்கால - உண்ட
உயிர்களைக் கக்குதலைக்; காண்டி - காண்பாயாக.

     கடலில் இரத்தவெள்ளம் அதிகரித்தது. அது ஆற்றுவழியாகத்
திரும்பிற்று. அதுபோல் காலன் தெவிட்டியதால் உயிர்களைக் கக்கினான் என்க.
கடல் ஆற்றின் வழியே இரத்தத்தை வெளியே தள்ளிற்று; யமன் வாய் வழியே
உயிரைக் கக்கினான். உயிர்கால - பெருமூச்சுவிட. அதிகம் உண்டமையால்
எமன் பெருமூச்சு விட்டான் என்பாரும் உளர். காலன் - யமனின் ஏவல்
செய்வோன் என்பாரும் உளர். காலன்  கூற்றத்திற்கு ஏவல் செய்பவனும் ஆம்
என்று இனியர் வரைந்தார். (சீவக 1477) ஞான வாசிட்டம், காலன் எவற்றிற்கும்
அடங்காதவன் என்று பேசும். நச்சு - விடம்.                     (63)