5415.

'தீர்த்தனும், கவிக் குலத்து இறையும், தேவி ! நின்
வார்த்தை கேட்டுஉவப்பதன் முன்னர், மாக் கடல்
தூர்த்தன,இலங்கையைச் சூழ்ந்து, மாக் குரங்கு
ஆர்த்தது கேட்டு,உவந்து இருத்தி, அன்னை ! நீ.

     தேவி - தெய்வத்தன்மையுடையவளே; அன்னை - தாயே !; நீ - நீ;
தீர்த்தனும் - தூய்மையுடைய இராமபிரானும்; கவிக்குலத்து
 இறையும் -
குரங்குகளின்தலைவனான சுக்கிரீவனும்; நின் வார்த்தை கேட்டு -
உன்னுடைய சொற்களைக் கேட்டு; உவப்பதன் முன்னர் -
மகிழ்ச்சியடைவதற்கு முன்பே; மாக்குரங்கு - பெரிய குரங்குக் கூட்டம்;
மாக்கடல் தூர்த்தன - கரிய கடலை மேடு பண்ணி (அதன் வழியே வந்து);
இலங்கையைச் சூழ்ந்து - இலங்கையை முற்றுகை இட்டு; ஆர்த்தது -
ஆரவாரிப்பதை; கேட்டு - செவியில் ஏற்று; உவந்து இருத்தி -
மகிழ்ச்சியுடன் இருப்பாயாக.

     இராமன் உன்மொழி கேட்டு மகிழ்வதன் முன் நீ, குரங்குகளின்
ஆரவாரம் கேட்டு மகிழ்க. தீர்த்தன் - திருமால். இங்கு அச் சொல்
இராமபிரானைக் குறிக்கிறது. தீர்த்தன் என்று அறிந்ததோ (திருவவதாரம் 114)
இறை - அரசன். மன்னவன் மக்கட்கு இறை (திருக்குறள்) ஆர்த்தது - தொழிற்
பெயர் மாக்கடல் கருங்கடல். பெருங்கடல் என்றும் கொள்ளலாம். ஆழ்கடல்
என்பதே பலபிரதிகளில் காண்கின்றது. இப்பாடலை விரைவு நவிற்சியணி என்று
கூறி அலங்கார சாத்திரத்தை விரிவுபடுத்தலாம்.                    (71)