5418. | 'குரா வரும் குழலி ! நீ குறித்த நாளினே, விராவு அரு நெடுஞ்சிறை மீட்கிலான்எனின், பரா வரும்பழியொடும் பாவம் பற்றுதற்கு, இராவணன் அவன்;இவன் இராமன்' என்றனன். |
குராவரும் குழலி -குரவ மலர்அணிந்த கூந்தலுடைய அம்மையே !; நீ குறித்த நாளில் - நீ குறிப்பிட்டுக் கூறிய நாட்களுக்குள்; விராவு அரு - எவரும் அணுக முடியாத; நெடுஞ்சிறை - பெரிய சிறையிலிருந்து; மீட்கிலான் எனில் - (இராமபிரான்) உன்னை மீட்காமல் போனால்; பரா வரும் - பரவி வருகின்ற; பழியொடு பாவம் - பழியும் பாவமும்; பற்றுதற்கு - பிடிப்பதற்கு; அவன் - அந்த இராமபிரான்; இராவணன் - இராவணன் ஆவான்; இவன் - இந்த இராவணன்; இராமன் - இராமன் ஆவான்; என்றனன் - என்று (அனுமன்) கூறினான். குரா - குரவம்(ஒருவகை மரம்) உன்னை மீட்காவிடில் இராவணனைச் சார வேண்டிய பாவம் இராமனைப் பற்றும் என்றனன். மேலே. 39 ஆம் பாடலின் (தோன்றா எழுவாயாக இருந்த) அனுமன் என்றனன் என்னும் பயனிலை கொண்டது. (74) |