| 5421. | 'நாகம்ஒன்றிய நல் வரையின்தலை, மேல்நாள், ஆகம் வந்து,எனை, அள் உகிர் வாளின் அளைந்த காகம் ஒன்றைமுனிந்து, அயல் கல் எழு புல்லால், வேக வெம் படைவிட்டது, மெல்ல விரிப்பாய். |
மேல்நாள் -முன்பு ஒருநாள்; நாகம் ஒன்றிய - வானம் அளாவிய; நல்வரையின் தலை - நல்ல சித்திரகூட மலையில்; வந்து - ஓர் பக்கத்தில் வந்து; எனை - என்னுடைய; ஆகம் - உடலை; அள் உகிர் வாளின் - கூரிய நகமாகிய வாளினால்; அளைந்த - கிளறிய; காகம் ஒன்றை - ஒரு காகத்தை; முனிந்து - கோபித்து; கல் அயல் - கல்லின் பக்கத்தில்; எழு புல்லால் - முளைத்த புல்லாலே; வேக வெம்படை - வேகமான கொடிய பிரம்மாத்திரத்தை; விட்டது - ஏவிய செய்தியை; மெல்ல விரிப்பாய் - மெதுவாகக் கூறுவாயாக. காக்கையின்கொடுஞ்செயலை இராமபிரான் அடையாளமாகக் கூறியதைப் பெரியாழ்வார் பேசினார். அது பிராட்டி கூறியதாக அமைக்கப்பெற்றது. | | சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி வித்தகனேஇராமாவோ நின்அபயம் என்றழைப்ப அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததுமோர் அடையாளம். |
என்று பெரியாழ்வார்திருமொழி பேசும் (3.10.6) காட்சிப்படலத்தில் (கம்ப. 5096) இந்த நிகழ்ச்சியைப் பிராட்டி நினைந்ததாகப் பேசப்படுகிறது. (77) |