5421.

'நாகம்ஒன்றிய நல் வரையின்தலை, மேல்நாள்,
ஆகம் வந்து,எனை, அள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றைமுனிந்து, அயல் கல் எழு புல்லால்,
வேக வெம் படைவிட்டது, மெல்ல விரிப்பாய்.

     மேல்நாள் -முன்பு ஒருநாள்; நாகம் ஒன்றிய - வானம் அளாவிய;
நல்வரையின் தலை - நல்ல சித்திரகூட மலையில்; வந்து - ஓர் பக்கத்தில்
வந்து; எனை - என்னுடைய; ஆகம் - உடலை; அள் உகிர் வாளின் -
கூரிய நகமாகிய வாளினால்; அளைந்த - கிளறிய; காகம் ஒன்றை - ஒரு
காகத்தை; முனிந்து - கோபித்து; கல் அயல் - கல்லின் பக்கத்தில்; எழு
புல்லால் -
முளைத்த புல்லாலே; வேக வெம்படை - வேகமான கொடிய
பிரம்மாத்திரத்தை; விட்டது - ஏவிய செய்தியை; மெல்ல விரிப்பாய் -
மெதுவாகக் கூறுவாயாக.

     காக்கையின்கொடுஞ்செயலை இராமபிரான் அடையாளமாகக் கூறியதைப்
பெரியாழ்வார் பேசினார். அது பிராட்டி கூறியதாக அமைக்கப்பெற்றது.

 

சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட
அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனேஇராமாவோ நின்அபயம் என்றழைப்ப
அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததுமோர் அடையாளம்.

என்று பெரியாழ்வார்திருமொழி பேசும் (3.10.6)

     காட்சிப்படலத்தில் (கம்ப. 5096) இந்த நிகழ்ச்சியைப் பிராட்டி
நினைந்ததாகப் பேசப்படுகிறது.                                (77)