| 5449. | தேன் உறைதுளிப்ப, நிறை புள் பல சிலம்ப, பூ நிறை மணித்தரு விசும்பிடை போவ, மீன் முறைநெருக்க, ஒளி வாளொடு வில் வீச, வானிடை நடாயநெடு மானம் எனல் ஆன. |
தேன் உறைதுளிப்ப - தேன் துளிகள்சிந்தவும்; நிறை புள்பல சிலம்ப - அங்கு நிறைந்து வாழ்ந்து வந்த பறவைகள் ஒலிக்கவும்; பூ நிறை மணித் தரு - மலர்கள் நிறைந்த இரத்தினமயமான மரங்கள்; விசும்பின் இடை போவ - ஆகாயத்தினிடத்தே போவனவாய்; மீன் முறை நெருக்க - (அவ் விண்ணில் உள்ள) நட்சத்திரங்கள் முறையே நெருக்கவும்; ஒளி வாளொடு வில் வீச - ஒளியானது வாளொடு போட்டியிட்டு ஒளி வீசவும்; வானிடை நடாய நெடு மானம் எனல் ஆய - ஆகாயத்தில் செல்லும் பெரிய விமானம் என்று சொல்லத்தக்கனவாயின. அனுமன் வீசிஎறிந்த மரங்களில் உள்ள பூக்களும், அவற்றில் உள்ள மணிகளும் வீசும் ஒளி வாள் போல, விளங்கின. மானம் - விமானம்; முதற் குறை. (21) |