5454. | சந்தனங்கள் தகர்ந்தன-தாள் பட, இந்தனங்களின்வெந்து எரி சிந்திட, முந்து அனங்கவசந்தன் முகம் கெட, நந்தனங்கள்கலங்கி நடுங்கவே. |
அனங்கன் முந்துவசந்தன் முகம்கெட - மன்மதனுக்கு முன்னே வரும் அவன் நண்பனான வசந்தனுடைய முகம் பொலிவு இழக்கவும்; நந்தனங்கள் கலங்கி நடுங்க - வானில் உள்ள பூஞ்சோலைகள் போல குலைந்து நடுக்க முறவும்; தாள் பட தகர்ந்தன சந்தனங்கள் - அனுமனின் கால்பட்டதால் தகர்த்து எறியப் பட்ட சந்தன மரங்கள்; இந் தனங்களின் வெந்து எரி சிந்திட - விறகுகளைப் போல எரிந்து நெருப்பைக்கக்கவும். நந்தனம் -தேவர் உலகத்தில் உள்ள பூஞ்சோலை; அசோகவனத்துச் சந்தன மரங்களின் நெருப்பு நந்தனங்களில் இருந்த வசந்தன் முகத்துப் பொலிவை அழித்தது. வசந்தன் - வசந்த காலத்துக்குரிய தேவன்; மன்மதனின் தோழன் என்பது புராண வழக்கு. அனங்க வசந்தன் எனக் கொண்டு அனங்கனாகிய வசந்தன் என இருபெயரொட்டாக்கி மன்மதனையே குறித்ததாகவும் கொள்ளலாம். (26) |