| 5461. | தாமரைத்தடம் பொய்கை, செஞ் சந்தனம்- தாம் அரைத்தனஒத்த; துகைத்தலின், காமரம் களிவண்டொடும், கள்ளொடும், காமர் அக்கடல், பூக் கடல் கண்டவே. |
உகைத்தலின் -அனுமன்பலவகை மரங்களை வீசி எறிந்ததனால்; தாமரை தடம் பொய்கை - தாமரை மலர்கள் நிறைந்த பெரிய தடாகம்; செம்சந்தனம் தாம் அரைத்தன ஒத்தது - சிவந்த சந்தனக்கட்டையை அரைத்துக்கரைக்கப்பட்டன போல் தோன்றிற்று; காமரம் - (அன்றியும்) சோலையின்மரங்கள்; காமர் அம் கடல் - தாம் வீழப் பெற்ற அழகிய அந்த உவர்க்கடலை; காமரம் களி வண்டொடும் கள்ளொடும் - காமரம் என்னும் பண்பாடிக் களிக்கும் வண்டுகளோடும் தேனோடும் கூடி; பூக் கடல் கண்ட - மலர்களால் இயன்ற கடலாகச் செய்தன. அனுமன் வீசிஎறிந்த மரங்களால் தாமரைத்தடாகம் சந்தனக் குழம்பாயிற்று; உவர்க்கடல் மலர்க்கடலாயிற்று. கா - சோலை; காமரம் - ஒரு வகைப் பண். (33) |