தொண்டை அம்கனி வாய்ச் சீதை துயக்கினால் - கொவ்வைக் கனிபோன்ற அழகிய வாயையுடைய சீதையிடம் கொண்ட தொடர்பால் (நிமித்தமாக); என்னைச் சுட்டாய் - என்னை நெருப்பு போல் சுட்டு வருத்தினாய்; விண்ட வானவர் கண் முன்னே - என்னிடத்துப் பகைமை கொண்ட தேவர்களின் கண்ணுக்கு எதிரில்; விரி பொழில் இறுத்து வீசக் கண்டனை நின்றாய் - பரந்த சோலையை (ஒரு குரங்கு) முறித்து அழிக்கவும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாய்; என்று - என்று நினைத்து; அரக்கன் காணு மேல் காய்தல் உண்டு என - அரக்கனாகிய இராவணன் காண்பானேல் தன்னை வருத்துதல் செய்யக்கூடும் என்று கருதி; வெரு வினான் போல் - அஞ்சினவனைப் போல; உடுவின் கோமான் ஒளித்தனன்- நட்சத்திரங்களுக்குத் தலைவனான சந்திரன் மறைந்தான்.
சந்திரன்இராவணனுக்கு அஞ்சி மறைந்ததாகக் கூறியது ஏதுத் தற்குறிப்பேற்ற அணி. நட்சத்திரங்களுக்கு நாயகன் என்று திங்களைக் குறிப்பது புராணக் கற்பனை. காதல் வேதனையுறும்போது சந்திரன் சுடுவான் என்பது கவிமரபு. துயக்கு - தொடர்பு; (சம்பந்தம்) திருமகள் அம்சமான சீதைக்கும் சந்திரனுக்கும் அமுதத்துடன் தோன்றியதனால் உடன் பிறப்புச் சம்பந்தம். (40)