அனுமன் ஓமமண்டபத்தைச் சிதைத்தல் 

5477.

என்றனள்;அரக்கிமார்கள் வயிறு அலைத்து,
                               இரியல்போகி,
குன்றமும்,உலகும், வானும், கடல்களும், குலைய
                                ஓட,
நின்றது ஓர்சயித்தம் கண்டான்; 'நீக்குவல் இதனை'
                                என்னா,
தன் தடக் கைகள்நீட்டிப் பற்றினன், தாதை ஒப்பான்.

     என்றனள் -என்று,பிராட்டி அரக்கியர்களுக்கு மறுமொழி கூறினாள்;
அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல் போகி - அக்காவல் அரக்கியர்
வயிற்றில் அடித்துக் கொண்டு நிலை தடுமாறிச் சென்று; குன்றமும், உலகும்,
வானும் கடல்களும் குலைய
 ஓட - மலைகளும் இந்தப்பூவுலகும் வானமும்
கடல்களும் தடுமாறும்படி ஓடியபோது; தன் தாதை ஒப்பான் - தன்
தந்தையாகிய வாயு தேவனை ஒத்த வலிமையுடைய அனுமன்; நின்றது ஓர்
சயித்தம் கண்டான் -
அங்கு நிலை பெற்று விளங்கிய ஒரு ஓம
மண்டபத்தைப் பார்த்து; 'இதனை நீக்குவல்' என்னா - இதை இவ்விடத்தை
விட்டுப் பெயர்த் தெறிவேன்' என்று; தன் தட கைகள் - தனது பெரிய
கைகளை; நீட்டி பற்றினன் - நீட்டி அதனைப் பற்றிக் கொண்டான்.

     சயித்தம் -சைத்தியம் என்னும் வடமொழியின் தமிழ்வடிவம் ஓமம்
வேள்வி முதலியன புரியும் மண்டபம். 'வானோங்கு சிமயத்து வாலொளி
சயித்தம்' (மணி மேகலை 28:131)                              (49)