| 5485. | 'சொல்லிடஎளியது அன்றால்; சோலையை, காலின், கையின், புல்லொடு துகளும்இன்றி, பொடிபட நூறி, பொன்னால் வில் இடுவேரம்தன்னை வேரொடு வாங்கி வீச, சில் இடம்ஒழிய, தெய்வ இலங்கையும் சிதைந்தது' என்றார். |
சொல்லிட எளியதுஅன்று - (அப்பருவத் தேவர்கள் மீண்டும் இராவணனிடம் அந்தக் குரங்கு செய்த அழிவும் ஆற்றலும் எங்களால்) சொல்லுவதற்கு எளியன அல்ல; சோலையை - அந்த அசோகவனத்தை; காலின் கையின் புல்லொடு துகளும் இன்றிப் பொடிபட நூறி - தன் கால்களாலும் கைகளாலும் புற்களும் அவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசியும் இல்லாதபடி பொடியாகும்படி அழித்து; பொன்னால் வில்லிடு வேரந்தன்னை வேரொடும் வாங்கி வீச - பொன்னால் ஒளி வீசும் (வேள்வி மண்டபமான) சயித்தத்தை அடியோடு எளிதி்ல் பிடுங்கி வீசி எறிய; சில் இடம் ஒழிய - ஒரு சிறு இடமே நீங்கலாக; தெய்வ இலங்கையும் சிதைந்தது என்றார் - தெய்வத் தன்மையுடைய இலங்கை நகரமும் (பெரும் பாலும்) அழிந்துவிட்டது என்று கூறினர். சில் இடம்,பிராட்டி இருந்த சிறு இடத்தைக் குறித்தது. இலங்கை, தெய்வக் கம்மியனான விசுவ கன்மாவால் அமை்க்கப்பட்டதாகலின் தெய்வ இலங்கை எனப் பட்டது. வேரம் - சயித்தம் (57) |