கிங்கரர் போருக்குவிரைதல் | 5491. | சூலம்,வாள், முசலம், கூர் வேல், தோமரம், தண்டு, பிண்டி- பாலமே முதலாஉள்ள படைக்கலம் பரித்த கையர்; ஆலமே அனையமெய்யர்; அகலிடம் அழிவு செய்யும் காலம்மேல்எழுந்த மூரிக் கடல் என, கடிது செல்வார். |
சூலம்....படைக்கலம் பரித்தகையர் - சூலாயுதம், முதலிய பலவகையான போர்க் கருவிகளைத் தாங்கிய கையர்களாகவும்; ஆலமே அனைய மெய்யர் - விஷத்தை ஒத்த கறுத்த உடலை உடையவராகவும் உள்ள அரக்கர்கள்; அகலிடம் அழிவு செய்யும் காலம் - பூமிப்பரப்பு முழுவதையும் அழித்து விடுதலை உடைய பிரளய காலத்தில்; மேல் எழுந்த மூரிக் கடல் என - பொங்கிக் கிளம்பிய வலிய கடல் போல; கடிது செல்வார் - விரைந்து போவாராயினர். அரக்கவீரர்கள், கையில் ஏந்திய ஆயுதங்களின் பெயர்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. பரித்தல் - தாங்குதல்; 'பரித்த காவினர்' (கம்ப. 768) (3) |