| 5493. | திருகுறும்சினத்து, தேவர், தானவர், என்னும் தெவ்வர் இரு குறும்புஎறிந்து நின்ற இசையினார் வசை என்று எண்ணி, 'பொரு குறும்புஏன்று, வென்று புணர்வது, பூ உண் வாழ்க்கை ஒரு குறுங் குரங்கு!' என்று எண்ணி, நெடிது நாண் உழக்கும் நெஞ்சர்; |
திரு குறும்சினத்து - முரண் கொண்டகோபத்தை உடைய; தேவர், தானவர் என்னும் தெவ்வர் - தேவர்கள் அசுரர்கள் என்று சொல்லப்படுகின்ற பகைவர்களுடைய; இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் - பெரிய அரண்களை அழித்து, விளங்கும் நிலை பெற்ற புகழையுடையவர்களுக்கு; பொரு குறும்பு ஏன்று - பொருகின்ற போரினை மேற்கொண்டு; பூஉண் வாழ்க்கை ஒரு குறுங் குரங்கு - மலர் (காய்கனி கிழங்கு) முதலியவற்றை உண்டு வாழ்கின்ற ஒரு சின்னக் குரங்கு; வென்றி புணர்வது வசை என்று எண்ணி - வெற்றி அடைவது இது ஒரு பெரும் பழிப்பு ஆகும் என்று நினைத்து; நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் - பெரிதும் வெட்கத்தால் வருந்தும் மனத்தினராயினர். நாண் உழக்கும்நெஞ்சர்; தேவர் தானவர்களை வென்ற தாம், பூவை உண்ணும் ஒரு குரங்கோடு போர் செய்ய நிகழ்ந்ததை நினைத்து வருந்தும் மனத்தினர். (5) |