5515.

புடையொடு விடு கனலின் காய் பொறியிடை,
                       மயிர்கள் புகைந்தார்;
தொடையொடு முதுகுதுணிந்தார்; சுழிபடு குருதி
                       சொரிந்தார்;
படை இடை ஒடிய,நெடுந் தோள் பறி தர, வயிறு
                       திறந்தார்;
இடை இடை,மலையின் விழுந்தார்-இகல் பொர
                       முடுகி எழுந்தார்.

     இகல் பொர முடுகிஎழுந்தார் - போர் செய்வதற்குவிரைந்து எழுந்த
சில அரக்கர்கள்; புடையொடு விடு கனலின் காய் பொறியிடை - அனுமன்
அடிக்கின்ற அடியுடனே வெளிப்படுகின்ற நெருப்பினுடைய எரிக்கின்ற
தீப்பொறிகளிலே; மயிர்கள் புகைந்தார் - தம் மயிர்கள் புகையப் பெற்றனர்;
தொடையொடு முதுகு துணிந்தார் -
சிலர், தம் தொடைகளோடு முதுகும்
துண்டிக்கப் பெற்றார்; சுழிபடு குருதி சொரிந்தார் - சுழிகள் உண்டாக இரத்தவெள்ளங்களைக் கக்கினார்கள்; படை இடை ஒடிய நெடும் தோள்
பறிதர - 
தம் கையில் கொண்ட ஆயுதங்கள் நடுவே ஒடிந்து போக நீண்ட
தோள்கள்உடலிலிருந்து வேறாகிப் போக; வயிறு திறந்தார் - தம் வயிறும்
பிளக்கப்பட்டவர்களானார்கள் சிலர்; இடை இடை மலையின் விழுந்தார் -
பயந்து ஓடியவர்கள், போர்க் களத்தின் இடையே பல இடங்களில் மலை
போல விழுந்தார்கள்.                                        (27)