5527.

சேறும்வண்டலும் மூளையும் நிணமுமாய்த் திணிய,
நீறு சேர் நெடுந்தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப,
ஆறு போல் வரும்குருதி, அவ் அனுமனால்
                            அலைப்புண்டு,
ஈறு இல்வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது, அவ்
                            இலங்கை.

     மூளையும் நிணமும்- அவ்வரக்கர்களுடைய மூளையும்
கொழுப்புக்களும்; சேறும் வண்டலும் ஆய்த்திணிய - சேறும் வண்டலும்
போன்று நெருங்கவும்; நீறு சேர் நெடும் - புழுதிகள் சேர்ந்த நீண்ட; தெரு
எலாம் -
அந்த இலங்கையின் தெருக்கள் முழுதும்; நீத்த மாய் நிரம்ப -
வெள்ளமாகி நிறையவும்; ஆறு போல் வரும் குருதி - ஒரு நதியைப் போல
பெருகி வருகின்ற இரத்தம்; அ அனுமனால் அலைப்புண்டு - அந்த
அனுமனால் அங்கும் இங்கும் அலையும் படிதள்ளப் பட்டு; அ இலங்கை -
அந்த இலங்கை நகர்; ஈறு இ்ல் வாய் தொறும் உமிழ்வது ஒத்தது -
முடிவில்லாத பல வாய்களின் வழியே கக்குவதுபோல் விளங்கியது.

     இலங்கையில்உள்ள தெருக்கள் நீளமாக இருத்தலால், ஈறில் வாய்
தொறும் எனக்கூறப் பட்டது.                                  (39)