கலி விருத்தம்

5546.

'சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மையார்
அலந்திலர்;செருக்களத்து அஞ்சினார் அலர்;
புலம் தெரிபொய்க் கரி புகலும் புன்கணார்
குலங்களின்,அவிந்தனர், குரங்கினால்' என்றார்.

     சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மை யார் அலந்திலர் -
(அதற்கு,வந்த காவலர்கள்) சினம் மிக்குக் கொண்டவர்களாகிய
அந்தக்கிங்கரர்கள் வருந்தி ஓடினார் அல்லர்; செருக்களத்து அஞ்சினார்
அல்லர் -
போர்க்களத்தில் பயந்து ஓடினார்களும் அல்லர்; புலம் தெரி
பொய்க்கரி புகலும் புன்கணார் குலங்களின் -
அறிவுக்குப் பொய் என்று
தெரிந்தும் பொய்ச்சாட்சி சொல்லும் இழிந்த அற்பர்களுடைய குலங்கள் போல;
குரங்கினால்
அவிந்தனர் என்றார் -அந்தக்குரங்கினால் போரில் அழிந்து
ஒழிந்தனர் என்று கூறினார்.
    'புலம் தெரிபொய்க் கரி புகலும் புன் கணார் குலங்கள் ஒழிதல்' -
உவமை. ஒழுக்கத்தை வற்புறுத்துவது. (58)