தோரண வாயில்மேல் ஏறி அனுமன் ஆர்த்தல்

5564.

நந்தனவனத்துள் நின்ற நாயகன் தூதன்தானும்,
'வந்திலர் அரக்கர்' என்னும் மனத்தினன், வழியை
                                  நோக்கி,
சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து,
                                 நின்றான்.

     நந்தன வனத்துள்நின்ற நாயகன் தூதன் தானும் - (அந்தச்
சமயத்தில்) அசோக வனம் என்ற சிங்காரத் தோட்டத்துள் தனித்து நின்ற
இராமபிரான் தூதனான அனுமனும்; அரக்கர் வந்திலர் என்னும் மனத்தினன்- மேலும் அரக்கர்கள் தன்னுடன் போரிட வரவில்லையே என்ற
எண்ணுடையவனாகி; வழியை நோக்கி - அவர்கள் வரும் வழியை எதிர்
நோக்கிக் கொண்டு; சந்திரன் முதல - சந்திரன் முதலவாகிய கிரகங்களும்;
வான மீன் எலாம் தழுவ நின்ற - ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்கள்
எல்லாமும் சூழ்ந்திருக்க விளங்கிய; இந்திர தனுவில் தோன்றும் - இந்திர
வில் என்னும் வானவில்லைப் போன்று தோன்றிய; தோரணம் இவர்ந்து
நின்றான் -
அங்கிருந்த தோரண வாயில் மீது ஏறி நின்றான்.

     இத் தோரண வாயில்,இராவணன், இந்திரனைப் போரில்
புறங்கண்டபோது, அவனது அமராவதியில் இருந்ததைக் கவர்ந்து,
அசோகவனத்தின் வாயிலாகக் கொண்டு வந்து வைத்ததாகும்.           (15)