5565.

கேழ் இருமணியும் பொன்னும், விசும்பு இருள்
                            கிழித்து நீங்க,
ஊழ் இருங்கதிர்களோடும் தோரணத்து உம்பர்
                            மேலான்,
சூழ் இருங்கதிர்கள் எல்லாம் தோற்றிடச் சுடரும்
                           சோதி,
ஆழியின் நடுவண்தோன்றும் அருக்கனே அனையன்
                           ஆனான்.

     கேழ் இருமணியும் பொன்னும் - நல்ல நிறமுள்ள பெரிய
இரத்தினங்களும், பொன்னும்; விசும்பு இருள் கிழி்த்து நீங்க - வானில்
உள்ள இருளைப் பிளந்து நீங்கிட; ஊழ் இருங்கதிர்களோடும் - முறை
முறையே தோன்றுகின்ற (இரத்தினம், பொன்) மிக்க கிரணங்களோடும் கூடிய;
தோரணத்து உம்பர் மேலான் - அத்தோரண வாயிலின் மேல் ஏறி நின்ற
அனுமன்; சூழ் இருங்கதிர்கள் எல்லாம் தோற்றிட - தன்னைச் சூழ்ந்த
பெருங் கிரணங்கள் யாவும் தோன்றி விளங்க; ஆழியின் நடுவண் தோன்றும்
-
கடலின் நடுவில் விளங்குகின்ற; சுடரும் சோதி அருக்கனே அனையன்
ஆனான் -
விளங்குகின்ற பேரொளியை உடைய சூரியனை ஒத்தவன்
ஆனான்.

     தோரணத்துஉம்பர் மேலான் (அனுமன்) அருக்கன் (சூரியன்) அனையன்
ஆனான். தோரணத்துக்குக் கடலும், மேலிடத்திருந்த அனுமனுக்குச் சூரியனும்
உவமையாயின. தோரணம் - தோரண வாயில். அனுமனுக்குக் கதிரவனை
முன்னும் (4768) உவமையாக்கினார்.                              (16)