5566.

செல்லொடுமேகம் சிந்த, திரைக் கடல் சிலைப்புத்
                                  தீர,
கல் அளைக்கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால,
கொல் இயல்அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம்,
                                  வீரன்
வில் என இடிக்க,விண்ணோர் நடுக்குற, வீரன்
                                  ஆர்த்தான்.

     மேகம் செல்லொடுசிந்த - மேகங்கள் இடியுடன் சிதறி விழவும்;
திரைக் கடல் சிலைப்பு தீர - அலைகளை உடைய கடல் தன் பேரொலி
அடங்கிப் போகவும்; கல் அளைக் கிடந்த நாகம் - மலைப் பொந்துகளில்
தங்கிக் கிடந்த பாம்புகள்; உயிரொடு விடமும் கால - தமது உயிரோடு
நஞ்சையும் ஒன்று சேர்ந்து உமிழவும்; கொல் இயல் அரக்கர் நெஞ்சில்
அச்சம் குடிபுக -
பிறரைக் கொல்லும் தன்மையுள்ள அரக்கர்களது மனத்தில்
பயம் வந்து புகுந்து நிலையாக நிற்கவும்; விண்ணோர் நடுக்கு உற -
தேவர்கள் நடுக்கம் அடையவும்; வீரன் வில் என இடிக்க - ரகுவீரனான
இராமபிரானது வில்லின் நாணொலி போல முழங்க; வீரன் ஆர்த்தான் -
சிறந்த வீரனான அனுமன் கர்ச்சனை செய்தான்.

     செல் - இடி;'வான் முழக்குச் செல்' (பரிபாடல் 13.44)         (17)