5574.

எறிந்தன,எய்தன, இடி உரும் என மேல்
செறிந்தனபடைக்கலம், இடக் கையின் சிதைத்தான்,
முறிந்தன தெறும்கரி; முடிந்தன தடந் தேர்;
மறிந்தன பரிநிரை-வலக் கையின் மலைந்தான்.*

     எறிந்தன, எய்தன- அரக்கர்களால் வீசி எறியப்பட்டனவும்,
எய்யப்பட்டனவுமாகிய; இடி உரும் என மேல் செறிந்தன படைக்கலம் -
பேரிடி போலத் தன் மேல் நெருங்கி செறிந்தனவான ஆயுதங்களை எல்லாம்;
இடக் கையின் சிதைத்தான் -
(தனது) இடக்கையால் அழித்துத்தள்ளி; வலக்
கையின் மலைந்தான் -
தன் வலக்கையால் போர் செய்யலானான்; தெறும்
கரி முறிந்தன -
(அதனால்) எதிர்த்து அழிக்கும் வலிமையுள்ளயானைகள்
முறிபட்டு இறந்தன; தடம் தேர் முடிந்தன - பெரிய தேர்கள் சிதைந்து
போயின; பரிநிரை மறிந்தன - குதிரைகளின் கூட்டம் கீழே விழுந்து
இறந்தன.

     அனுமன் தன் இருகைகளாலும் விரைந்து போர் செய்த திறம்
கூறப்பட்டது. சிதைத்தான்; முற்றெச்சம்.                          (25)