5582. | புகை நெடும்பொறி புகும் திசைதொறும் பொலிந்தான்; சிகை நெடுஞ்சுடர் விடும் தேர்தொறும் சென்றான்; தகை நெடுங்கரிதோறும், பரிதொறும், சரித்தான்; நகை நெடும்படைதொறும், தலைதொறும், நடந்தான். |
புகை நெடும்பொறி புகும் திசை தொறும் பொலிந்தான் - புகையோடுகூடிய நீண்ட நெருப்புப் பொறி (சினத்தீ) செல்லும் இடங்களில் எல்லாம் சென்று விளங்குபவனாகிய அனுமன்; சிகை நெடும் சுடர் விடும் தேர்தொறும் சென்றான் - சிகரங்களினின்று நீண்ட ஒளி விடும் தேர்கள் இருக்குமிடம் எல்லாம் சென்றான்; தகை நெடும் கரிதொறும் பரிதொறும், சரித்தான் - சிறப்பமைந்த பெரிய யானைகள் குதிரைகள் இருக்கும் இடங்களில் எல்லாம் சஞ்சரித்தான்; நகை நெடும் படை தொறும் - (தன்னைப் பார்த்து அற்பக்குரங்கு என்று) ஏளனம் செய்து சிரித்த போர்ப் படைகள் தோறும்; தலை தொறும் நடந்தான் - அப்படையில் உள்ள வீரர்கள் தலை தோறும் நடந்து சென்று அவர்களை அழித்தான். பொலிந்தான்;வினையாலணையும் பெயர். (பொலிந்தவன்) (33) |