5587. | கறுத்து எழுநிறத்தினர், எயிற்றினர், கயிற்றார், செறுத்து எரிவிழிப்பவர், சிகைக் கழு வலத்தார், மறுத்து எழுமறலிகள் இவர் என அதிர்ந்தார், ஒறுத்து,உருத்திரன் என, தனித் தனி உதைத்தான். |
கறுத்து எழுமனத்தினர் - கோபித்து எழுகின்றமனத்தை உடையவர்களும்; எயிற்றினர் - கோரப் பற்களை உடையவர்களும்; கயிற்றார் - பாசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டவர்களும்; செறுத்து எரி விழிப்பவர் - பகைத்து நெருப்புப் போல விழிப்பவர்களும்; சிகைக் கழு வலத்தார் - கூரிய கழு என்னும் படை வலிமை உடையவர்களும்; இவர் மறுத்து எழு மறலிகள் என அதிர்ந்தார் - இவர்கள் பகைமை பாராட்டிக் கிளம்புகின்ற யமன்களே என்னும்படி பெரு முழக்கம் செய்பவர்களுமான அரக்க வீரரை; ஒறுத்து - கடிந்து; உருத்திரன் என - உருத்திர மூர்த்தியைப் போல; தனித் தனி உதைத்தான் - அனுமனும் ஒவ்வொருவராக உதைத்துக் கொன்றான். மார்க்கண்டேயர்பொருட்டு, சிவபிரான் யமனைத் தன் திருவடியால் உதைத்து அழித்ததைக் குறிக்கொண்டு, அனுமன், உருத்திரன் எனப்பட்டான். கயிறு - பாசப் படை; சிகைக்கழு - நுனி கூரிய கழுப்படை. (38) |