சம்புமாலிசினத்தோடு போருக்கு விரைதல் அறுசீர்ஆசிரிய விருத்தம் 5590. | கானே காவல் வேழக் கணங்கள் கத வாள் அரி கொன்ற வானே எய்த,தனியே நின்ற மத மால் வரை ஒப்பான், தேனே புரை கண்கனலே சொரிய, சீற்றம் செருக்கினான், தானேஆனான்-சம்புமாலி, காலன் தன்மையான். |
காலன்தன்மையான் சம்பு மாலி - யமன் போன்ற கொடிய தன்மையனாகிய சம்புமாலி; கத(ம்)வாள் அரி கொன்ற - கோபம் உள்ள ஒளி தங்கிய சிங்கத்தினால் கொல்லப்பட்டனவாய்; கானே காவல் வேழம் கணங்கள் வானே எய்த - காட்டையே தங்கட்கு உரிய வாழிடமாகக் கொண்ட யானைக் கூட்டங்கள் விண்ணுலகம் சேர (இறக்க); தனியே நின்ற மதமால் - தனிப்பட்டு நின்ற; வரை ஒப்பான் - மத மயக்கம் கொண்ட யானையை ஒத்து; தானே ஆனான் - (தன்னோடு வந்தவரெல்லாம் இறக்க) தான் ஒருவனே எஞ்சி நின்றவனாய்; தேனே புரை கண் கனலே சொரிய - தேனை ஒத்துச்சிவந்த கண்கள் நெருப்புப் பொறியை வெளிப்படுத்த; சீற்றம் செருக்கினான் - கோபம் மிக்கவனானான். (41) |