5591. | காற்றின் கடிய கலினப் புரவி நிருதர் களத்து உக்கார்; ஆற்றுக் குருதிநிணத்தோடு அடுத்த அள்ளல் பெருங் கொள்ளைச் சேற்றில்செல்லாத் தேரின் ஆழி ஆழும்; நிலை தேரா, வீற்றுச்செல்லும் வெளியோ இல்லை; அளியன் விரைகின்றான். |
காற்றின் கடியகலினப் புரவி நிருதர் - காற்றினும் விரைந்து செல்வனவான, கடிவாளம் பூட்டிய குதிரை வீரர்களான அரக்கர்கள்; களத்து உக்கார் - போர்க்களத்தில் மாண்டார்கள்; குருதி ஆற்று நிணத்தோடு அடுத்த - இரத்த ஆற்றில் கொழுப்புகளோடு சேர்ந்த; அள்ளல் பெருங் கொள்ளைச் சேற்றில் - நெருங்கிய மிகப் பெரிய சேற்றில்; செல்லாத் தேரின் ஆழி - ஆழும் போக முடியாத, தேரினது சக்கரங்கள் அமிழ்ந்து போகும்; நிலை தேரா - அப்படிப் புதைகின்ற தன்மையை உணர்ந்தும்; வீற்றுச் செல்லும் - (அவ்விடத்தைவிட்டு) தனிமையோடு செல்லக் கூடிய; வெளியோ இல்லை - வெற்றிடமோ இல்லை (இவ்வாறு இருக்கவும்); விரைகின்றான் - போருக்கு அந்தச் சம்புமாலி விரைந்து செல்பவனானான்; அளியன் - இவன் மிகவும் இரங்கத்தக்கவன். (42) |