5619. | பொன் திணிந்த தோள் இராவணன் மார்பொடும் பொருத அன்று இழந்தகோடு அரிந்து இடும் அழகு உறு குழையர்; நின்ற வன் திசைநெடுங் களி யானையின் நெற்றி மின் திணிந்தஅன ஓடையின் வீர பட்டத்தர். |
பொன் திணிந்ததோள் இராவணன் - பொன்னாபரணங்கள்நிறைந்த தோள்களை உடைய இராவணனது; மார் பொடும் பொருத அன்று இழந்தகோடு - மார்பினோடும் போர் புரிந்த அந்தக் காலத்தில் (திசை யானைகள்) இழந்தவையான கொம்புகளை; அரிந்து இடும் உறும் குழையர் - அறுத்து அவற்றைக் கொண்டு செய்த அழகு பொருந்திய காதணியை உடையவர்கள்; திசை நின்றவல் நெடும் களி யானையின் - (அன்றியும்) எட்டுத் திக்குகளிலும் தோற்றுநின்ற வலிய பெரிய செருக்குற்ற யானைகளின்; நெற்றி மின் திணிந்த அன ஓடையின் - நெற்றிகளில் அணிந்த மின்னல்கள் நெருங்கி நின்றாற் போன்ற (மிக்க ஒளியை உடைய) முகபடாத்தினால் இயன்ற; வீர பட்டத்தர் - வீரபட்டத்தை அணிந்தவர். பஞ்சசேனாபதிகளின் வீரச் சிறப்பை விளக்குவது. குழை - காதணி; யானையின் தந்தங்களால் காதணி செய்வது வீரம். 'நாக மருப்பின் இயன்றதோடும்' (சீவக - 2440) திசை யானையின் நெற்றிப் பட்டத்தால் ஆன வீரபட்டம் நெற்றியில் அணிவதும் வீரர் மரபு. (19) |