5623. | மலைகளைநகும் தட மார்பர்; மால் கடல் அலைகளை நகும்நெடுந் தோளர்; அந்தகன் கொலைகளைநகும் நெடுங் கொலையர்; கொல்லன் ஊது உலைகளை நகும்அனல் உமிழும் கண்ணினார். |
மலைகளை நகும் தடமார்பர் - (அவர்கள்) மலைகளைஏளனம் செய்யும் பரந்த மார்பை உடையவர்கள்; மால்கடல் அலைகளை நகும் நெடும் தோளர் - பெரிய கடலின் அலைகளைப் பழிக்கும் நீண்ட தோள்களை உடையவர்கள்; அந்தகன் கொலைகளை நகும் நெடும் கொலையர் - யமனுடைய கொலைத் தொழிலைப் பழிக்கும் பெரும் கொலைத் தொழிலை உடையவர்கள்; கொல்லன் ஊது உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார் - கொல்லன் (துருத்தி கொண்டு) ஊதும் உலைக்களங்களைப் பார்த்து இகழ்ந்து (சிவப்பன போல) நெருப்பை கக்குகின்ற கண்களை உடையவர்கள். இந்த அரக்கவீரர்களுடைய மார்பு முதலியவை மலை முதலியவற்றினும் விஞ்சியவை என்பது கூறப்பட்டது. விதிப்படி ஆயுள் முடிந்தோரை மட்டுமே கூற்றுவன் கொல்வான்; இராவணனின் படைத்தலைவர்கள் எவரையும் கொல்வர். ஆகையால், யமனுடைய கொலைத் தொழிலைப் பழிப்பவர் (ஏளனப் படுத்துவோர்) ஆனார், பஞ்ச சேனாபதியர். தாடகை பற்றி இராமனிடம் விசுவாமித்திரர் கூறியபோது, விதி முடிந்தது என்ற ஒரே தருமத்தை நோக்குவான் 'கூற்றுவன்; மூக்கில் ஓர் அயல் மணம் முகர்ந்தால் எதிர்ப்படும் எதனையும் கொன்று தீர்ப்பாள் இவள். இவளைப் போல் உயிரினம் தின்னும் ஒரு கூற்றும் (கம்ப. 380) உண்டோ என்று சொல்லிய கருத்து நினையத்தக்கது. (23) |