அனுமன் பெரியவடிவம் கொள்ளலும், அரக்கர் சினந்து படை வழங்கலும் 5629. | ஆயிடை,அனுமனும், அமரர்கோன் நகர் வாயில்நின்றுஅவ் வழிக் கொணர்ந்து வைத்த மாச் சேயொளித்தோரணத்து உம்பர், சேண் நெடு மீ உயர்விசும்பையும் கடக்க வீங்கினான். |
ஆ இடை -அப்பொழுது; அமரர் கோன் நகர் வாயில் நின்று - தேவர்தலைவனான இந்திரனது தலை நகராகிய அமராவதிப் பட்டணத்தின் வாசலிலிருந்து; அவ்வழிக் கொணர்ந்து வைத்த - அவ்விடத்து (அசோகவனம்) கொண்டு வந்து வைக்கப்பட்ட; மா சேய் ஒளித் தோரணத்து உம்பர் - மிக்க செந்நிறத்தை உடைய தோரணத்தின் மேலே; சேண் நெடு மீ உயர் விசும்பையும் - மிக நெடுந் தூரமாக மேலே உயர்ந்த ஆகாயத்தையும்; கடக்க வீங்கினான் - கடந்து செல்லுமாறு உருவத்தைப் பெரிதாக்கினான்; (29) |