5634. | வார் மதக்கரிகளின் கோடு வாங்கி, மாத் தேர் படப்புடைக்கும்; அத் தேரின் சில்லியால், வீரரை உருட்டும்;அவ் வீரர் வாளினால், தாருடைப்புரவியைத் துணியத் தாக்குமால். |
வார் மதக்கரிகளின் - நீண்ட மத யானைகளின்;கோடு வாங்கி - கொம்புகளை முறித்தெடுத்து; மாத்தேர் படப்புடைக்கும் - பெரிய தேர்கள் அழிய அடிப்பான்; அத்தேரின் சில்லியால் வீரரை உருட்டும் - அழிந்த தேர்களின் சக்கரங்களைக் கொண்டு, போர் வீரர்களை உருண்டு விழச் செய்வான்; அவ்வீரர் வாளினால் - உருண்டு வீழ்ந்த அரக்கவீரரது கைவாள்களைக் கொண்டு; தார் உடைப் புரவியை துணியத்தாக்கும் - கிண்கிணி மாலை பூண்ட குதிரைகளைத் துணிபட்டு விழும்படி வெட்டுவான். அனுமன், தான்அழித்த பொருள்களையே ஆயுதங்களாகக் கொண்டு அப்படைகளைக் கொன்றான் என்பதாம். அனுமன் இதேபோலப் போர் செய்தை 5579 ஆம் பாடலிலும், அடுத்த 5635ஆம் பாடலிலும் காணலாம். (34) |