| 5659. | தூங்கினபாய் பரி; சூதர் உலைந்தார்; வீங்கினதோளவர் விண்ணின் விசைத்தார்; ஆங்கு, அது கண்டு,அவர் போய் அகலாமுன், ஓங்கிய மாருதி,ஒல்லையின் உற்றான். |
பாய் பரிதூங்கின - (அனுமன் தேர்களைப்பற்றி மேலே எழும் போதுபூட்டியிருந்த) பாய்ந்தோடும் குதிரைகள் அந்தரத்தில் தொங்கின; சூதர் உலைந்தார் - தேரோட்டுவோர் அழிந்தார்; வீங்கின தோளவர் விண்ணில் விசைத்தார் - (அத்தேர்களிலிருந்த) பருத்த தோள்களை உடைய அவ்விரு தலைவர்களும் (அத்தேரினின்று) வான் வழியே விரைந்தனர்; ஆங்கு அது கண்டு - அப்போது அவர்கள் வானத்தில் செல்வதைக் கண்டு; அவர் போய் அகலாமுன் - அவர்கள் நீங்கித் தப்புவதற்கு முன்னம்; ஓங்கிய மாருதி - பெரு வடிவு படைத்த அனுமன்; ஒல்லையின் உற்றான் - விரைவில் (அவர்களைச் சென்று) கிட்டினான். தூங்குதல் -தொங்குதல்; ஒல்லை - விரைவு. (59) |