| 5672. | 'துண்டத்தூண் அதனில் தோன்றும் கோளரி, சுடர் வெண் கோட்டு மண் தொத்தநிமிர்ந்த பன்றி ஆயினும், மலைதல் ஆற்றா; அண்டத்தைக்கடந்து போகி அப் புறத்து அகலின் என்பால் தண்டத்தை இடுதிஅன்றே, நின்வயின் தந்திலேனேல் !' |
துண்டத் தூண்அதனில் தோன்றும் கோள் அரி - துண்டமாகிய ஒரு கம்பத்திலிருந்து தோன்றிய பற்றுதல்வல்ல நரசிங்கமானாலும்; சுடர்வெண் கோட்டு மண்தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும் - ஒளியை உடைய வெள்ளிய பல்லில், இந்தப் பூமி ஒரு துகள் போலத் தொத்திக் கொண்டிருக்க, ஓங்கி வளர்ந்த வராகமே ஆனாலும், (அவையும்); மலைதல் ஆற்றா - என்னுடன் பொருதற்குத் தரமுடையன அல்ல; அண்டத்தைக் கடந்து போகி அப்புறத்து ஆகலின் - (அந்தக்குரங்கு) அண்ட கோளத்தைத்தாண்டி, அப்பாற் சென்று, புற அண்டத்தி்ல் அகன்று சென்றாலும்; நின்வயின் தந்திலேனேல் - (யான் அதைப் பிடித்துக் கொண்டு வந்து)உன்னிடத்துத் தராது விட்டேன் என்றால்; தண்டத்தை இடுதி - அதற்குரியதண்டனையை எனக்கு விதிப்பாய். கோள் அரி;கொள்ளுதல் வல்ல சிங்கம்; கொண்ட இலக்கைத் தப்பாமல் பற்றுதல் என்பது கோள் என்ற சொல்லின் குறிப்பு. முதனிலை நீண்ட தொழிற் பெயர். அன்று, ஏ; அசைகள். நரசிங்கமும், வராகமுமே கூட என்னுடன் பொரமுடியாதவை. இந்தக் குரங்கு எம்மாத்திரம் என்பது கருத்து. குரங்குஎங்குச் சென்றாலும் பிடித்து வருவேன்; இல்லையேல் தண்டனை பெறுவேன்' என்பது இவன் உறுதிமொழி. (5) |