எழுசீர் ஆசிரியவிருத்தம் 

5695.

பிள்ளப்பட்டன நுதல் ஓடைக் கரி,
     பிறழ்பொன் தேர், பரி, பிழையாமல்,
அள்ளப்பட்டு அழிகுருதிப் பொரு புனல்
     ஆறாக, படிசேறு ஆக,
'வள்ளப்பட்டனமகரக் கடல் என
     மதில்சுற்றிய பதி மறலிக்கு ஓர்
கொள்ளைப்பட்டனஉயிர்' என்னும்படி
    கொன்றான்-ஐம் புலன் வென்றானே !

    ஐம்புலன்வென்றான் - ஐந்து புலன்களையும்வென்ற அனுமன்;
வள்ளப்பட்டன மகரக்கடல் மதிள் எனச் சுற்றிய பதி -
மகர மீன்கள்
நிறைந்துள்ள வளம் பெற்ற கடல், அரணாகும்படி சூழ்ந்திருக்கும் இலங்கை
நகரத்தில் உள்ள; உயிர் - பிராணிகள் யாவும்; மறலிக்கு ஓர் கொள்ளைப்
பட்டன என்னும்படி -
யமனுக்குப் பெருங் கொள்ளையில் அகப்பட்டுள்ளன
என்று (கண்டவர்) கூறுமாறு; நுதல் ஓடைக் கரி - நெற்றிப்பட்டம் அணிந்த
யானைகளும்; பிறழ் பொன் தேர், பரி - குப்புற்று விழுந்த அழகிய
தேர்களும் குதிரைகளும்; பிள்ளப்பட்டன - சிதைக்கப்பட்டன; அள்ளப்பட்டு
அழிகுருதி பொரு புனல் ஆறு ஆக -
(வருகின்ற பிராணிகள் எல்லாம்)
வாரி எடுக்கப்பட்டு அழிந்த (அரக்கர்களுடைய) மோதும் இரத்த
வெள்ளமாகிய நீர், ஆறாய ஓடவும்; படி சேறு ஆக - அதனால் பூமி சேறாக
ஆகவும்; பிழையாமல் கொன்றான் - எவரும் தப்பிப் போகாமல் கொன்று
அழித்தான்.

     சிதைக்கப்பட்டபடையின் குருதி, ஆறாகவும், உடல் முதலியன
ஆற்றினடியில் படியும் சேறாகவும் காணப்பட்டன. 'நெறிநின்று பொறிகள்
ஐந்தும் வென்றவன்' (5253) என அனுமனைப் பிராட்டி கணித்ததை
உருக்காட்டு படலத்தில் கம்பர் குறித்திருப்பது நினைவு கூரத்தக்கது. வள் -
வளம்;                                                     (28)