எய்தான்,வாளிகள், எரி வாய் உமிழ்வன, ஈர்-ஏழ்;எதிர் அவை பார் சேரப் பெய்தான், மணிஎழு ஒன்றால்; அன்று, அது, பொடியாய் உதிர்வுற, வடி வாளி, வெய்தாயின, பலவிட்டான்; வீரனும், வேறு ஓர்படை இலன், மாறா வெங் கைதானே பொருபடை ஆக, தொடர் கால் ஆர்தேர்அதன் மேல் ஆனான்.
எரிவாய்உமிழ்வன - நெருப்பைத்தம்மிடமிருந்து கக்குவனவான; ஈர் ஏழ் வாளிகள் எதிர் எய்தான் - பதினான்கு அம்புகளை (அக்ககுமாரன்) எதிரே (அனுமன் மீது) செலுத்தினான்; அவை பார் சேர - அவ்வம்புகள் தரையிலே விழும்படி; மணி எழு ஒன்றால் - தன்கையில் கொண்ட) அழகிய இரும்புத்தண்டு ஒன்றினால்; பெய்தான் - (அனுமன் அவற்றைப்) பயனற்றனவாக வீழ்த்தினான்; அன்று,அது பொடியாய் உதிர்வு உற - அப்பொழுது, அந்த இரும்புத்தண்டு பொடியாக உதிர்ந்து போகும்படி; வெய்து ஆயின வடிவாளி பல விட்டான் - மேலும் கொடுமையான கூரியபல அம்புகளை (அக்ககுமாரன்) (அனுமன் மீது) பிரயோகித்தான்; வீரனும் - வீரனான அனுமனும்; வேறு ஓர் படை இலன் - வேறு ஒரு ஆயுதம் தன்னிடம் இல்லாதவனாகி; மாறா - (அவ்வம்புகளுக்கு) எதிராக; வெங்கைதானே பொரு படை ஆக - வலிய தன்கைகளையே போர் செய்யும் படைகளாகக் கொண்டு; தொடர்கால் ஆர்தேர் அதன் மேல் ஆனான் - தன் முன்னே தொடர்ந்து வரும் சக்கரங்கள் பொருந்திய (அக்ககுமாரனது) தேரின் மீது ஏறினான்.