5719.

ஏறினன்,விசும்பினுக்கு எல்லை காட்டுவ
ஆறு-இருநூறு பேய்பூண்ட ஆழித்தேர்;
கூறின கூறினசொற்கள் கோத்தலால்,
பீறின நெடுந்திசை; பிளந்தது அண்டமே.

     விசும்பினுக்குஎல்லை காட்டுவ - வானத்தினது மேல்எல்லையை
(இவ்வளவு என்று தனது உயர்ச்சியினால்) தெரிவிப்பனவான; ஆறு - இருநூறு
பேய் பூண்ட -
ஆயிரத்து இருநூறு பேய்கள் பூட்டப் பெற்றுள்ளதான;
ஆழித்தேர் ஏறினன் -
வலிய சக்கரங்களை உடைய தேரில் (மேகநாதன்)
ஏறினான்; கூறின கூறின சொற்கள் - (அங்ஙனம் ஏறிய அவன்) மிகுதியாகச்
சொன்ன வீர வார்த்தைகள்; கோத்தலால் நெடுந்திசை பீறின - ஒன்றோடு
ஒன்று தொடுத்து வந்தமையால், (அவ்வதிர்ச்சியால்) நெடிய திசைகள் எல்லாம்
பிளவுபட்டன; அண்டம் பிளந்தது - அண்ட கோளமும் பிளவுப்பட்டது.

     இந்திரசித்து,போருக்குச் சென்ற வேகமும் வீரமும் கூறப்பட்டது.
விசும்பினுக்கு எல்லைகாட்டுவ - ஆகாயத்தின் மேல் எல்லை வரை உயர்ந்து
விளங்கியது என்பது கருத்து.                                   (3)