| 5724. | தாள் இணைவீழ்ந்தான், தம்பிக்கு இரங்குவான்; தறுகணானும் தோள் இணைபற்றி ஏந்தித் தழுவினன், அழுது சோர்ந்தான்; வாள் இணை நெடுங்கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க, மீளிபோல்மொய்ம்பினானும் விலக்கினன்; விளம்பலுற்றான்; |
தாள் இணைவீழ்ந்தான் - (அரண்மனை புகுந்தஇந்திரசித்து) இராவணனது இரு பாதங்களில் விழுந்து; தம்பிக்கு இரங்குவான் - தம்பி அக்ககுமாரன் இறந்தமைக்குத் துயர் கொண்டு புலம்புவானான்; தறுகணானும் - அஞ்சாமை உடைய இராவணனும்; தோள் இணை பற்றி ஏந்தி - இந்திரசித்துவின் இரண்டு தோள்களையும் பிடித்து எடுத்து; தழுவினன் அழுது சோர்ந்தான் - அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு தானும் அழுது வருந்திச் சோர்வுற்றான்; இணைவாள் நெடுங்கண் மாதர் - இருவாள்கள் போன்ற நெடுங்கண்களை உடைய அரக்கர் குல மகளிர்கள்; வயிறு அலைத்து அலறி மாழ்க - வயிற்றில் அடித்துக் கொண்டு கதறிமயங்கிச் சோர; மீளிபோல் மொய்ம்பினானும் - சிங்கம் போன்ற வலிமை உடைய இந்திரசித்தும்; விலக்கினன் விளம்பலுற்றான் - அவர்களை விலக்கி, தந்தையை நோக்கிப் பேசத் தொடங்கினான். (8) |