5726.

'கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர் என்று இப்
பைங் கழல்அரக்கரோடும் உடன் சென்ற பகுதிச்
                                    சேனை,
இங்கு ஒருபேரும்மீண்டார் இல்லையேல், குரங்கு
                             அது, எந்தாய் !
சங்கரன், அயன்,மால் என்பார்தாம் எனும் தகையது
                             ஆமே !

     எந்தாய் -எனதுதந்தையே !; கிங்கரர், சம்புமாலி - கிங்கரர் என்னும்போர் வீரர்களும், சம்புமாலி என்பவனும்; கேடு இலா  ஐவர் -
அழிவில்லாத பஞ்சசேனாபதிகளும்;  என்று இப்பைங்கழல் அரக்கரோடும் -
என்று சொல்லப்படுகின்ற இந்தப் பசுமையான வீரக்கழல் அணிந்த அரக்க
வீரர்களுடன்; உடன்சென்ற பகுதிச்சேனை - கூடிச் சென்ற சேனையின்
பாகங்களில்; இங்கு ஒரு பேரும் மீண்டார் இல்லையேல் - ஒருவரேனும்
இங்குத் திரும்பி வந்தார் இல்லை என்றால்; குரங்கு அது ஆமே ! - அது
குரங்கு என்று சொல்லத்தக்கதா ?; சங்கரன், அயன், மால் என்பார் தாம் -
சிவபிரான், பிரமன், திருமால் என்று சொல்லப்படுகின்ற மும்மூர்த்திகள் தாம்;
எனும் தகையது - என்று கருதத்தகுவதாகும்.

     போருக்குச்சென்றவர் ஒருவரும் மீளவில்லை என்றால் எதிர்த்துப் போர்
செய்வது குரங்கா ? அன்று; மும்மூர்த்திகளின் சொரூபம் என்று கருத
வேண்டும் என்பது கருத்து.                                     (10)