5736.

புலித்தோலின் பலகை எல்லாம் பொரு கடல் புரவி
                            என்னக்
கலித்து ஓடி,உம்பரோடும் ஓடின, காலன் அஞ்ச;
ஒலித்து ஆழிஉவாவுற்றென்ன உம்பர் தோரணத்தை
                            முட்ட,
வலித்தார் திண்சிலைகள் எல்லாம்; மண்டின
                            சரத்தின் மாரி.*

     புலித்தோலின்பலகை எல்லாம் - புலித்தோலால் ஆகியநீண்ட
கேடயங்கள் எல்லாம்; பொருகடல் புரவி என்ன - போரிடும் குதிரைக்கடல்
என்று சொல்லும்படி; கலித்து ஓடி - செருக்கி மேற்சென்று; காலன் அஞ்ச -
யமனும் பயப்படும்படி; உம்பரோடும் ஓடின - தேவர்கள் மேலே சென்றன;
திண் சிலைகள் எல்லாம் வலித்தார் - வலிய விற்களை எல்லாம்
பூட்டினார்கள்; கரத்தின் மாரி - அதிலிருந்து புறப்பட்ட அம்பு மழை; உவா
ஆழி ஒலித்துற்றென்ன -
பௌர்ணமி நாளிலே கடல் பொங்கிக் கிளர்ந்து
மேல் எழும்பியது போல; உம்பர் தோரணத்தை முட்ட மண்டின -
தேவருலகத்தில் கட்டிய தோரண வாயிலை முட்டும்படி நெருங்கின.

     தோலாற்செய்யப்பட்டது கேடயம் - கிடுகுபடை என்பர். பகைவர் வீசும்
படைகள் தன்மேல் வீழாதபடித் தடுப்பதற்கு அமைத்திருப்பது ஆகும். அது
புலித்தோலாற் செய்யப் பெறல் உண்டு போலும். படை அல்லாத கேடயமே
யமனும் அஞ்சும்படி மேற்சென்றது என்று வியந்ததாம்.              (20)