| 5762. | தாருகன்குருதி அன்ன குருதியில், தனி மாச் சீயம் கூர் உகிர்கிளைத்த கொற்றக் கனகன் மெய்க் குழம்பின் தோன்ற, தேர் உக,கையின் வீரச் சிலை உக, வயிரச் செங் கண் நீர் உக, குருதிசிந்த, நெருப்பு உக உயிர்த்து நின்றான். |
தாருகன் குருதிஅன்ன குருதியில் - தாருகாசுரனுடைய இரத்தப் பெருக்குப் போன்ற இரத்தப் பெருக்கில்; தனிமாசீயம் கூர் உகிர் கிளைத்த -ஒப்பற்ற நரசிங்கமூர்த்தி, தனது கூரிய நகங்களால் கிளறிப் பிளந்த; கொற்றகனகன் மெய்குழம்பின் தோன்ற - வெற்றியை உடைய இரணியனது உடல் குழம்பாகக் கலக்கப்பட்டுக் கிடந்ததுபோல் உருத் தெரியாமல் (தன் தம்பியின் உடல்) கிடந்து விளங்க (அதனைக் கண்டு); தேர் உக - தான் ஏறி வந்த தேரும் நிலை குலைய; கையின் வீர சிலை உக - தன் கையில் பிடித்திருந்த வீரத் தன்மையிற் சிறந்த வில்லும் நழுவ; வயிரம் செங்கண் நீர் உக குருதி சிந்த - பகைமையைக் காட்டும் தனது சிவந்த கண்கள் நீரையும் இரத்தத்தையும் சிந்த; நெருப்பு உக உயிர்த்து நின்றான் - நெருப்பையும் கக்க (இந்திரசித்து) பெருமூச்சு விட்டுக் கொண்டு நின்றான். அக்க குமாரன்உடல் விழுந்து கிடந்த இடத்தின் இரத்தப் பெருக்குக்கு, தாருகன் இரத்தமும், அது உருத்தெரியாமல் சிதைந்து கிடந்ததற்கு, இரணியன் உடலும் உவமைகள். அவ்வுடலைக் கண்ட இந்திரசித்து உயிர்த்து நின்றான் என்பதாம். தாருகன்: ஓர்அசுரன்: காளிதேவியால் அழிக்கப்பட்டவன்; 'தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்' (சிலப். 20: 39-40) (46) |